Sunday, November 24, 2013


“ஒரு தேசிய இனம் தேசியத்தை உருவாக்குவதில்லை. மாறாக, ஒரு தேசியமே தேசிய இனத்தை உருவாக்குகின்றது.” – சரித்திரவியலாளர் Eric Hobsbawm
சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் வரை, “தேசிய இனம்” என்றால் என்னவென்று எவருக்கும் தெரியாத காலம் ஒன்றிருந்தது. ஒரே மொழி பேசும் மக்கள், இனம், தேசிய இனம் எல்லாம் பிற்காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டவை தான். முந்திய காலங்களில் மக்கள் தாம் சார்ந்த மதத்துடன், இனக்குழு, சாதி, பிரதேசம், குடும்பம் இவற்றுடன் சேர்த்து பார்க்கப்பட்டனர். அவற்றையே தமது அடையாளமாக காட்டிக் கொண்டனர். உலகில் எந்த மூலையிலும், “தேசிய இனம்” என்ற ஒரு பிரிவு இருக்கவில்லை. நூறு வருடங்களுக்கு முன்னர், “சிங்களவர்களும், தமிழர்களும் தனிதனி தேசிய இனங்கள்.” என்று எவராவது கூறினால், எல்லோரும் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைப்பார்கள். புராதன காலத்தில் பௌத்த, இந்து மதங்கள் மட்டுமே பிரதேசம் கடந்து, சாதிப் பாகுபாட்டைக் கடந்து மக்களை ஒன்றிணைத்தன.
“தேசியம்” என்றால் இப்படித்தான் இருக்கும் என்று வரையறுப்பது கடினம். அதன் அர்த்தம் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டு வந்துள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின் போது கூறப்பட்ட தேசியம், பிரான்சின் அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து பிரஜைகளையும் குறித்தது. பிற்காலத்தில் “தேசியம்”, “இனம்” இரண்டும் ஒன்றாக சேர்க்கப்பட்டது. ஒரே மொழி பேசும், ஒரே கலாச்சாரம் கொண்ட மக்களை தேசிய இனம் என்றார்கள். மேற்கொண்டு அந்த அர்த்தத்திலேயே தேசியத்தை ஆராய வேண்டியிருக்கின்றது. ஐரோப்பாவில் 18 ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ம் நூற்றாண்டு முழுவதும், இன்று நாம் காணும் அடிப்படையைக் கொண்ட நவீன தேசங்கள் உருவாகின. தொழிற்புரட்சி, பொருளாதார வளர்ச்சி என்பன, தேச பரிபாலனத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன. புதிய ஆளும் வர்க்க பிரதிநிதிகளுக்கு, மக்களை ஆள்வது முன்னர் எப்போதும் இல்லாதவாறு கடினமாக இருந்தது. முன்பு மதமும், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பும், இந்திய உபகண்டத்தில் சாதியமைப்பும் மக்களை ஒரு கட்டுக்கோப்புக்குள் அடக்கி வைத்திருந்தது. அத்தகைய சமூக அமைப்பு முதலாளித்துவ பொருளாதாரம் வளருவதற்கு தடைக்கல்லாக இருந்தது. மேலும் பிரெஞ்சுபுரட்சியின் பின்னர், ஐரோப்பிய நாடுகளின் ஆளும் வர்க்கம், தாராளவாத சித்தாந்தமே சிறந்தது என்று நம்பினார்கள்.
மக்களின் விசுவாசத்தைப் பெறுவதற்கு, மேலிருந்து அவர்களை ஆளுவதற்கு தேசியவாதம் சிறந்த தத்துவமாகப் பட்டது. தேச எல்லைக்குள் பொதுவான மொழி ஒன்று உருவாக்கப்பட்டது.பெரும்பான்மையான தேசிய அரசுகளில் ஆளும் வர்க்கம் எந்தப் பிரதேசத்தை சேர்ந்ததோ, அந்தப் பிரதேச மொழி பொது மொழியாகியது. ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் மக்கள் மத்தியில் ஒற்றுமையுணர்வை தோற்றுவிக்க பொது மொழி பயன்பட்டது. மேலும் பொதுவான பண்பாடு, வரலாறு என்பன உருவாக்கப்பட்டன. அதற்கு முன்னர், ஒவ்வொரு பிரதேச மக்களும் தமக்கென தனியான கலாச்சாரத்தை, வரலாற்றைக் கொண்டிருந்தனர். அவை சில நேரம் ஒன்றுக்கொன்று முரணானதாகவும் இருக்கலாம், அல்லது ஒரே மாதிரியாகவும் இருக்கலாம். தேசிய அரசு அவற்றை மேவிகொண்டு ஆதிக்க கலாச்சாரம் ஒன்றை தோற்றுவித்தது. தேசிய அரசு தோன்றின காலத்தில் இருந்து ஒரே மாதிரியானதாக வரலாறு மாற்றி எழுதப்பட்டது.
தேசியவாதம் எங்கே, எப்படித் தோன்றியது? பிரிட்டனும், பிரான்சும் நூறு ஆண்டுகளாக போரில் ஈடுபட்டிருந்தன. அந்தக் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று யுத்தம் செய்வது சர்வசாதாரணம். பிரிட்டனின் அரச பரம்பரையும், பிரெஞ்சு அரச பரம்பரையும் தமக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளத்தான் போரில் ஈடுபட்டார்கள். ஆனால் நூறாண்டு காலப் போர் நீடிப்பதற்கு ஏதாவதொரு சித்தாந்தம் தேவைப்பட்டது. அது “நாட்டுப்பற்று” என்ற வடிவம் எடுத்தது. நூறாண்டு காலப் போரின் முடிவில் பிரிட்டிஷ், பிரெஞ்சு “நாட்டுப் பற்றாளர்கள்” உருவாகியிருந்தனர். கிறிஸ்தவ நாடுகளில் தந்தை வழிக் கலாச்சாரம் வேரூன்றியிருந்தது. (கிறிஸ்தவ மதத்தில் கடவுள் ஒரு ஆணாக கருதப்படுகிறார்.) அதனால் ஒரு தேசிய அரசு “தந்தையர் நாடு” என்று அழைக்கப்பட்டது. தாய்வழிக் கலாச்சாரம் கொண்ட கீழைத்தேய நாடுகளில் அது “தாய் நாடு” என்று மொழிபெயர்க்கப்பட்டது.
19 ம் நூற்றாண்டில் “வெகுஜன தேசியவாதம்” தோன்றியது. அதாவது பொதுவான மொழி, கலாச்சாரம் என்பன மக்கள் மயப்பட்டன. அதன் அடிப்படையில், “தேசிய உணர்வு“, “இனம்” என்பன மையப்படுத்தப் பட்டன. “இனம்” என்ற ஒன்று புதிதாக தோன்றிய பின்னர், ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், மற்ற இனத்தை சேர்ந்தவர்களை அன்னியர்களாகப் பார்த்தனர். அன்னியப்பட்ட இனங்கள் மத்தியில் அவநம்பிக்கையும், சந்தேகமும் தோன்றியது. ஒரு இனத்தின் அவலத்திற்கு, மற்ற இனம் மீது பழி போடப்பட்டது. பழிச் சொல்லுக்கு ஆளாகும் இனம் ஒரே நாட்டை சேர்ந்த சிறுபான்மையினமாக இருக்கலாம். அல்லது வேறொரு தேசத்தை சேர்ந்த இனமாக இருக்கலாம். ஒரே தேசத்திற்குள், உழைக்கும் வர்க்கம் முதலாளிகளுடன் சமரசத்தை பேண வேண்டும். (தேசிய ஒற்றுமைக்கு மிக அவசியம்) அதனால் பொருளாதார பிரச்சினைகளுக்கும் மற்ற இனத்தின் மீது பழி போடப்பட்டது. உதாரணத்திற்கு, ஜெர்மனியில் ௦ 20 ம் நூற்றாண்டு வரையில் அத்தகைய அந்நியர்களை வெறுக்கும் தேசியவாதம் நிலவியது. அதன் விளைவுகளும் உலகறிந்தவை தான்.
பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை
தேசியவாதம் எப்போதும் வலதுசாரிக் கருத்தியலாகவே பார்க்கப்பட்டது. “நாங்கள்“, “அவர்கள்” என்று இனங்களை மோதல் நிலையில் வைத்திருப்பது, வலதுசாரித் தேசியவாதம் என்று பிரிக்கப்பட்டது. இதைவிட சமத்துவம், சுதந்திரம் என்பனவற்றிற்கு போராடுவது இடதுசாரித் தேசியம் என்று வகைப் படுத்தப்பட்டது. தேசியவாதத்தின் வளர்ச்சியை ஐந்து கட்டங்களாக பிரித்து புரிந்து கொள்ளலாம்.
முதலாவது கட்டம்: தேசியவாதத்தின் பிறப்பு. பிரெஞ்சுப் புரட்சியின் போது தான் முதன்முதலாக “தேசியம்” என்ற சொல் பாவிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அது முற்போக்கான பாத்திரத்தை வகித்தது. நிலவுடமையாளர்களுக்கு எதிராக சாதாரண மக்களை, தேசியம் என்ற பெயரில் முன்னிறுத்தியது. அன்று தேசியம் என்பது சாமானிய உழைக்கும் மக்களைக் குறிக்கும். நிலப்பிரபுக்கள் தேசியத்துக்குள் அடங்கவில்லை. புரட்சி நடந்த காலத்தில் பல மொழி பேசும் மக்களும் பிரஜைகள் என்று சமத்துவமாக பார்க்கப்பட்டனர்.
இரண்டாவது கட்டம்: 1870 ம் ஆண்டுக்குப் பின்னரும், முதலாம் உலகப்போர் வரையிலும். தேசியம் என்றால் இனம் என்று புரிந்து கொள்ளப்படுகின்றது. பல தேசிய அரசுகள் தமக்கென ஒரு மொழியை அரச கரும மொழியாக்கின. ஆதிக்கம் செலுத்திய மொழியைப் பேசும் மக்கள் தனி இனமாக கருதப்பட்டனர். சிறுபான்மை மொழிகள் அடக்கப்பட்டன. இந்தப் பிரிவினை ஏற்படுத்திய முறுகல் நிலை, முதலாம் உலக யுத்தத்தில் போய் முடிந்தது.
மூன்றாவது கட்டம்: முதலாம் உலகப்போர் முடிவில், மேற்குலகில் வில்சன் கோட்பாடு “தேசிய சுயநிர்ணயம்” என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஐ.நா. சபையின் முன்னோடியான, தேசங்களின் கூட்டமைப்பிலும் அது அங்கீகாரம் பெற்றது. அதற்கு வேறொரு தூண்டுதலும் இருந்தது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெற்றி பெற்றதும், 1918 ல் கம்யூனிஸ்ட்கள் சுயநிர்ணைய உரிமை அடிப்படையிலான சோவியத் குடியரசுகளை அறிவித்தனர். காலனிய நாடுகள் விடுதலையடைய உரிமையுடையவை என்று அறிவித்தனர். போல்ஷெவிக் பிரகடனத்தை சமன் செய்வது போல வில்சன் கோட்பாடு அமைந்திருந்தது. முதலாம் போரின் முடிவில் ஐரோப்பாவின் வரைபடம் மாறியிருந்தது. புதிதாக பல நாடுகள் சுதந்திரமடைந்தன. அவற்றின் சுயநிர்ணய உரிமையை வில்சன் கோட்பாடு அங்கீகரித்தது. ஆனால் அதற்காக ஒவ்வொரு இனமும் தனக்கான தேசிய அரசை பெற்றுக் கொண்டன என்று அர்த்தமில்லை. உதாரணத்திற்கு யூகோஸ்லேவியா என்ற சுயநிர்ணய உரிமை கொண்ட புதிய நாட்டில், செர்பியர்கள் பிற தேசிய இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர். ஐரோப்பாவில் நிலவிய குழப்பகரமான சூழ்நிலை இரண்டாம் உலகப்போருக்கு வழி வகுத்தது.
நான்காவது கட்டம்: இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், உலகில் இடதுசாரிகளின் பலம் அதிகரித்தது. காலனியாதிக்கத்தை இல்லாதொழிப்பதற்கு தேசியவாதத்தின் அவசியத்தை இடதுசாரிகளும் உணர்ந்தனர். லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் பல காலனிகள் விடுதலையடைந்தன. முதலாம் உலகப்போர் காலத்தில், கனடா, நியூசிலாந்து போன்ற பிரிட்டிஷ் காலனிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. “வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு” அடிப்படையிலேயே அந்த சுதந்திரம் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களை சேர்ந்த பிரிட்டிஷ் காலனிகள் இரண்டாம் உலகப்போர் வரையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது. சுயநிர்ணய உரிமையை முன்மொழிந்த வில்சன் கோட்பாட்டின் நீட்சியாகவே வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு கருதப்படுகின்றது. பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலனிகள் அந்த யாப்பை அடிப்படையாக கொண்டிருந்தன. அண்மையில் சிம்பாப்வே வெஸ்ட்மின்ஸ்டர் யாப்புக்கு பதிலாக, புதிய யாப்பு எழுதக் கிளம்பிய பொழுது சர்வதேச நெருக்கடியை எதிர்கொண்டது. (1972 ல் குடியரசான இலங்கை அதே போன்ற நெருக்கடிக்கு உள்ளானது.) இன்று பல தமிழ் தேசியவாத அறிவுஜீவிகள் வில்சன் கோட்பாடு, வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு போன்றன தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது போல பேசி வருகின்றனர். உண்மையில் வில்சன் கோட்பாடு ஐரோப்பாவை மட்டும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு ஆங்கிலேயர் குடியேறிய காலனிகளுக்கு சுதந்திரம் வழங்கும் நோக்குடன் எழுதப்பட்டது. இரண்டுமே காலனிய அடிமைப்பட்ட நாடுகளின் விடுதலை குறித்து பேசவில்லை.
ஐந்தாவது கட்டம்: பெர்லின் மதில் இடிந்து, சோஷலிச நாடுகள் மறைந்து விட்ட காலகட்டம். தற்காலத்தில் நாம் வாழும் உலகில் பல மோதல்களுக்கு காரணமானது. வலதுசாரிகளும், இடதுசாரிகளும் தமக்கேற்ற தேசியவாதம் பேசிய காலம் மறைந்து விட்டது. மேற்குலகின் ஆதிக்கத்தின் கீழ் வலதுசாரி சக்திகள் தாம் விரும்பியவாறு தேசியவாதத்தை வரையறுக்கின்றனர். அது மேலும் புதிய நாடுகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. யூகோஸ்லேவியா உடைந்து செர்பியா, ஸ்லோவேனியா, குரோவேசியா, போஸ்னியா, மாசிடோனியா, மொண்டி நெக்ரோ, கொசோவோ போன்ற புதிய தேசங்கள் உருவாகின. இப்படி எந்த தேசம் புதிதாக உருவாக வேண்டும் என்று அவர்களே தீர்மானித்தார்கள். வேறு சில நாடுகளின் தேசிய சுயநிர்ணய உரிமையை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. உதாரணத்திற்கு அப்காசியா, ஒசேத்தியா.
இவ்விடத்தில் சில முக்கிய குறிப்புகளை மீளாய்வு செய்ய வேண்டும். இலங்கையில் ஒரு காலத்தில், தமிழ் தேசியம் பேசிய வலதுசாரிகள், “சிங்கள இனவாதம்” என்ற சொல்லை மட்டுமே பாவித்து வந்தனர். அதே நேரம், சிங்கள/தமிழ் இடதுசாரிகள் “சிங்களப் பேரினவாதம்” என்ற சொல்லை பாவித்தனர். தற்போது சிங்கள பேரினவாதம் என்ற சொல் பரவலாக எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்றது. மேற்குலக அரசியல் கோட்பாட்டாளர்கள் உருவாக்கிய “சுயநிர்ணய உரிமை”ஒவ்வொரு தேசிய இனத்துக்குமானது என்ற தவறான புரிதல் காணப்படுகின்றது. உண்மையில் மேற்குலக சுயநிர்ணய உரிமை தோன்றிய காலத்தில், அது ஐரோப்பாவில் பேரினவாத அரசுகளுக்கு ஆதரவாகவே எழுந்தது.
உதாரணத்திற்கு பிரான்ஸில் கோர்சிகா, ஒக்கிடண்டல், நோர்மாண்டி, அல்சாஸ், பாஸ்க் ஆகிய மாகாணங்களுக்கென தனியான மொழிகள் உள்ளன. இவை பிரெஞ்சு மொழிக்கு சம்பந்தமில்லாதவை. ஆனால் பிரெஞ்சு பேரினவாதம் அந்த சிறுபான்மை மொழிகளை அடக்கி அழித்தது. பொது இடங்களில், தெருவில் கூட பிரெஞ்சு மொழி தவிர்ந்த வேறு மொழிகள் பேசக் கூடாது என்று உத்தரவு போட்டது. மீறியோர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். ஜெர்மனியிலும் அதே போல, டென்மார்க்கை அண்டிய பகுதியில் பிரீஸ் என்றொரு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். முதலாம், இரண்டாம் உலகப்போருக்கு இடைப்பட்ட ஜெர்மனியில் போலிஷ் மொழி பேசும் பிரதேசங்களும் அடங்கின. ஆனால் ஜெர்மன் பேரினவாதம் இவற்றை எல்லாம் அடக்கி, ஜெர்மன் மொழி மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக்கியது. அதே போல நெதர்லாந்தில், பிரீஸ்லாந்து மாகாணத்தில் பேசப்படும் பிரீஸ் மொழி, மற்றும் மாகாணங்களுக்கு உரிய கிளை மொழிகள், எல்லாவற்றையும் ஹோலந்து மொழி ஆதிக்கம் செலுத்தியது. அதாவது ஹோலந்து என்ற மேற்கு மாகாணத்தில் மட்டுமே பேசப்பட்ட மொழி. அது பின்னர் நெதர்லாந்து (டச்சு) என்ற பெயரில் செம்மையான மொழியாக்கப்பட்டது. யூகோஸ்லேவியாவில் செர்பிய மொழி ஆதிக்கம் செலுத்தியது. இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம்.
நாம் இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், மேற்குலக “சுயநிர்ணய உரிமை” கோட்பாட்டாளர்கள், அத்தகைய பேரினவாத அரசுகளுக்கு ஆதரவாகவே கொள்கை வகுத்தனர். அதே கொள்கையை பின்னர், ஐரோப்பிய காலனிகளிலும் நடைமுறைப் படுத்தினர். பிரிட்டிஷ் காலனிகளாக இருந்து சுதந்திரமடைந்த நாடுகளை உதாரணமாக எடுப்போம். இந்தியாவில் இந்தி மொழி, பாகிஸ்தானில் உருது மொழி, இலங்கையில் சிங்கள மொழி, பிற மொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவது, பிரிட்டிஷாருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக, அத்தகைய ஆதிக்கம் தமது நிர்வாக பிரிவுகளை நிரந்தரமாக வைத்திருக்க உதவும் என்று நம்பினார்கள். அதாவது காலனிய காலத்தில் எவ்வாறு ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தியதோ, அதே இடத்தில் காலனிகளில் பெரும்பான்மை மொழிகள் உள்ளன. இது பிரிட்டிஷாரின் நவகாலனித்துவ கொள்கைக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது. அன்று எஜமானர்கள் நேரடியாக ஆண்டார்கள். இன்று எஜமானர்களின் சுதேசிப் பிரதிநிதிகள் ஆள்கிறார்கள். அது மட்டும் தான் வித்தியாசம்.....{கலை}
(தொடரும்)...

0 comments: